சென்னை: ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் குழந்தைகள் உரிமைகள் மீறப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ஈஷா யோகா மையத்தின் நிர்வாகி கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பியிருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால் ஆணையம் தரப்பில், குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வரும்போது அதில் சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குழந்தைகள் உரிமைகள் பாதிக்கப்படும் போதும், கேள்விக்குறியாகும் போதும் அதன் மீதான புகாரில் விசாரணை மேற்கொள்ளவும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுப்பப்படும் சம்மனை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய மறுத்துவிட்ட நீதிபதி, புதிய தேதி, நேரத்தை குறிப்பிட்டு மீண்டும் 4 வாரங்களில் சம்மன் அனுப்பி விசாரிக்க ஆணையத்துக்கு உத்தரவிட்டார். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பும் சம்மனுக்கு உரிய ஆதாரங்களுடன் 2 வாரங்களில் ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விசாரணையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.